புத்ராஜெயா:
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லியின் (Rafizi Ramli) மகன் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதால், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சு சூல்கிஃப்லி அகமட் (Datuk Seri Dr. Dzulkefly Ahmad) கேட்டுக்கொண்டார்.
மருத்துவ அறிக்கைகள், இரசாயனப் பகுப்பாய்வுகளுக்கு நேரம் எடுக்கும் என்றும், ஆனால் அவை முழுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புத்ராஜெயாவில், ரோச் மலேசியாவுடன் (Roche Malaysia), சுகாதார அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
சந்தேக நபர்கள், ரஃபிசியின் மகனைத் தாக்கி, ஊசியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், இன்னும் காவல்துறையின் விசாரணையில் உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், சாட்சிகள் உட்பட, 19 பேரின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊசியில் செலுத்தப்பட்ட இரசாயனப் பொருள் குறித்த மருத்துவமனை அறிக்கையை அதிகாரிகள் தற்போது எதிர்பார்த்துள்ளனர்.




















