கோலாலம்பூர்:
ஜோகூர், தெற்குப் பகாங் பகுதிகளில், சமீபத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு தேடும் வகையில், நாளை இரவு, பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், சுராவுகளில் (surau), solat hajat தொழுகை நடத்துமாறு, பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி’ஆயத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா (Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பகாங் அரச குடும்பம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பகாங் சுல்தான், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, அமைதி, பாதுகாப்பு, செழிப்புக்காக பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தினார்.
ஜோகூர், செகாமட்டில் நேற்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, செகாமட்டில் 4.1 ரிக்டர் அளவிலும், யோங் பெங்கில் 2.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.





















