2025-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டம் ஒத்திகை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் திடீர் வரவு!

கோலாலம்பூர்:

புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான முழு ஒத்திகையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை கலந்து கொண்டார். ஒத்திகையின்போது, அணிவகுப்பு அதிகாரிகள், பங்கேற்பாளர்களை, குறிப்பாக, மனித கிராஃபிக்ஸ் (human graphic) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 2,000 மாணவர்களை அவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதனிடையே, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில், மூத்த அதிகாரிகள், பிரதமரை வரவேற்றனர். பிரதமரின் 20 நிமிட வருகையின்போது, ​​பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தேசிய தினக் கொண்டாட்டம், நாட்டின் தலைவர்கள், மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் வருகையுடன் தொடங்கும்.

அதைத் தொடர்ந்து, நாட்டின் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) கொடி ஏற்றப்படும். பிறகு, ருகுன் நெகாரா (Rukun Negara) உறுதிமொழி ஏற்கப்படும். 2.1 கி.மீ. நீளத்திற்கு நடைபெறும் இந்த அணிவகுப்பில், 14,010 பங்கேற்பாளர்கள், 78 வாகனங்கள், ஏழு அலங்கார ஊர்திகள், 116 விலங்குகள், 21 இசைக்குழுக்கள் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here