கோலாலம்பூர்: பாங்கி எம்.பி ஓங் கியான் மிங் இன்று கோவிட் -19 பரிசோதனையில் நேர்மறையான பதிலை பெற்றதாக இன்று அறிவித்தார். நாடாளுமன்றம் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் அமர்வு தொடங்கியதிலிருந்து சபையில் எந்த கோவிட்-19 தொற்றுக்களும் பதிவு செய்யப்படவில்லை.
இன்று நாடாளுமன்றத்திற்கு சென்ற பிறகு, நண்பகல் 3.30 மணிக்கு கோவிட் -19 சுய பரிசோதனை செய்ததாகவும் அதன் முடிவு நேர்மறையானது, அதன் பின்னர் பிசிஆர் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது என்று ஓங் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், அவருக்கு கோவிட்-19 இருப்பதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என்றும், அடுத்த 10 நாட்களை அவர் வீட்டு தனிமைப்படுத்தலில் கழிப்பார் என்றும், அவரது மணிக்கட்டில் ஒரு இளஞ்சிவப்பு மணிக்கட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு, இதனை குறிப்பிட்டிருந்தார்.
சில மணிநேரங்களுக்கு முன்பு, நாடாளுமன்ற சபாநாயகர் அசார் ஹருன், எம்பிக்கள் பேச்சுக்கள் மற்றும் விவாதங்களில் பங்கேற்கும்போது முகக்கவசங்களை அகற்றுவதாக அறிவித்தார். ஏனெனில் நாடாளுமன்றத்தில் இதுவரை நோய்த்தொற்றுக்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதேயாகும்.
“எனினும், பேச்சு முடிந்தவுடன் அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு எம்பி அல்லது நாடாளுமன்ற ஊழியர் யாரும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று அசார் கூறினார். மேலும் நாடளுமன்றத்தில் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றார்.