கோலாலம்பூர்:
கிழக்கு ஆப்கானிஸ்தானில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் எந்தவொரு மலேசியருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள், விழிப்புடன் இருக்குமாறும், ஈ-கான்சுலர் (E-Konsular) வலைத்தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசிய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன், தொடர்பில் உள்ளதாகவும், தேவைப்பட்டால், தூதரக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போது, மீட்புக் குழுக்கள், தொலைதூர மலைப் பகுதிகளுக்குச் சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





















