மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வில் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. நால்வர் உயிரிழந்ததுடன், 13 பேரைக் காணவில்லை.
இந்த அசம்பாவிதம் நந்தேட், நாசிக், தானே, அமராவதி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்பட்ட பிள்ளையார் சதுர்த்தி விழாவையடுத்து, வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட சிலைகளை கரைக்கும் நிகழ்வு செப்டம்பர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அப்போது கடலில் பலர் மூழ்கினர். மாலை வரை நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 13 பேரில் சிலர் உயிரிழந்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மும்பையில் நடந்த பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் மின்சார விபத்தால் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது. சகினாகா பகுதியில் அறுந்து தொங்கிய மின்கம்பியை சிலை ஒன்று உரசியதில், அருகில் இருந்த 36 வயது ஆடவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேசமயம், அந்த விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்ததாக மும்பை நகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.





















