கத்தாரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை – மலேசிய தூதரகம்

கோலாலம்பூர்:

கத்தாரின் லெக்தைஃபியாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் எந்த மலேசியரும் பாதிக்கப்படவில்லை என்று தோஹாவில் உள்ள மலேசிய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களின் அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்டது. இருப்பினும், அங்கு வசிக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், சம்பவம் நடந்த பகுதிக்கு செல்லாமல் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், கத்தார் அரசாங்கம் நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், தேசிய வான்வழிப் போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசியர்கள் அவசரத் தேவைகளுக்காக தூதரகத்தை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்ளலாம். அலுவலக நேரங்களில் +974 4483 6463 மற்றும் அவசர நேரங்களில் +974 3374 6733 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

ஊடகத் தகவல்களின்படி, இந்த தாக்குதல் ஹமாஸ் தலைவரின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அச்சமயம் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவினர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த கைதி பரிமாற்றத் திட்டத்தை விவாதித்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here