ராம நாமத்தின் மகிமை :

எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்து கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும் போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது. இருதயத்தில் இறைவனை உணரும் வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும் நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை. ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.

அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார், “இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது..” என்று என்றார்.

ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன. ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி. ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது. நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார்.

அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்து சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம். இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார். ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக் கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.

அதற்கு ஆஞ்சநேயர் பிரபு எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான “ராம் ராம்” என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது. நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம். ராம நாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. ராம நாமம் மிகவும் அற்புதமானது. ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம் பாவங்களிலிருந்து மீண்டு வரலாம். ராம் என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது.

இதனாலேயே வயது முதிர்ந்த பலரும் வணக்கம் சொல்வதாக இருந்தாலும் கூட ராம் ராம் என்றே சொல்லுவார்கள். ராம நாம பெருமையை உணர்ந்தவர்கள் எப்போதும் ராம நாமம் உச்சரிப்பதையே சுவாசமாக கருதி வாழ்வது உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here