சபாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக ஆரம்ப உதவிகளை வழங்குவதே அரசின் மிகப்பெரிய பொறுப்பு என பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவகம் (NADMA), சபா மாநில அரசு மற்றும் துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் நிலைமையை அனுக்கமாக கவனித்து வருவதாகவும், கூட்டாட்சி அரசின் முழு சேவைகளும் சபா அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அன்வார் கூறினார்.
“உயிரிழந்தவர்கள், வீடுகள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதமடைந்த குடும்பங்களை நாம் ஆழ்ந்த கவலை மற்றும் துயரத்துடன் அனுதாபம் தெரிவிக்கிறோம். குறிப்பாகச் சிறிய சாலைகள், பள்ளிகள், சுகாதார மையங்கள் போன்ற பொது வசதிகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கோத்த கினபாலுவில் உள்ள கம்பூங் செந்தரகாசிஹ் மற்றும் பாப்பாரில் உள்ள கம்பூங் மூக் பகுதிகளில் நிகழ்ந்த இரண்டு நிலச்சரிவுகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளம் பாதித்த பெனாம்பாங், பியூஃபோர்ட், மாம்பாக்குட் மற்றும் தவாவ் ஆகிய நான்கு மாவட்டங்களில் 220 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் தற்காலிக இடமாற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதே சமயம், அன்வார், பேரிடர் பாதித்தவர்களுக்கு உதவ NADMA மூலமாக உடனடியாக RM10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், இது தவிர மாநில அரசுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட RM11 மில்லியன் அவசரப் பணிகளுக்கும் கூடுதலாகும் எனவும் தெரிவித்தார்.





















