புரட்டாசி மாதத்தின் வழிபாட்டு சிறப்புகளும், பலன்களும்

* ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருட வழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும்.

* ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் எள், நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

* திருப்பதி ஏழுமலையானை குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

* புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* பெருமாளின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

* புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

* புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

* புரட்டாசி சனிக்கிழமையில் காகத்திற்கு ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

* புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

* புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அனந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

* சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினார் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

* புரட்டாசி மாதத்தில் பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பது தனிச் சிறப்பாகும். பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

* பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

* புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

* புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1வது, 5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here