கோலாலம்பூர்,
சபாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றன. மண் சரிவும் வெள்ளப்பெருக்கும் சபா மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்திருக்கிறது.
இந்நிலையில் வங்கியில் கடன் வாங்கி இருக்கும் தனிநபர்கள், வணிகர்கள் ஆகியோர் கடன் ஒத்திவைப்பு கால வரம்பை (மொரோட்டோரியம்) பேக்ங் ராக்யாட் அறிவித்திருக்கிறது. 6 மாதங்கள் வரை அவர்களுக்கு இந்தக் கால வரம்பை அவ்வங்கி வழங்கி இருக்கிறது.
இப்பேரிடர் காலம் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கும் வங்கியின் வாடிக்கையாளர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மொரோட்டோரியம் வசதி வழங்கப்பட்டிருக்கிறது என்று பேங்க் ராக்யாட் தலைமை நிர்வாக அதிகாரி அமாட் ஷாரில் முகமட் ஷரிப் இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன், வாடகைக்கார் கடன், கல்விக்கடன், மைக்ரோ கடன், அழகுக்கடை கடன், கிரேடிட் கார்டு கடன் ஆகியவை இந்த மொரோட்டோரியம் வசதி வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் இந்த அறிவிப்பு சற்று மன நிம்மதியைத் தரும் என்று அவ்வங்கி நம்புகிறது. மலேசிய மடானி கோட்பாட்டின் கீழ் மனிதநேயம், பரிவின் மதிப்பை பேங்க் ராக்யாட் வெகுவாக மதித்து இத்திட்டத்தை அறிவித்திருக்கிறது என்று அமாட் ஷாரில் தெரிவித்தார்.
இதன் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு www.bankrakyat.com.my என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் வலம் வருவதோடு 1-300-800-800 என்ற எண்ணில் பேங்க் ராக்யாட் கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம். அதேவேளையில் பேங்க் ராக்யாட்டின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும் அவ்வப்போது தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.




















