கோலாலம்பூர்:
2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் வேப் எனப்படும் மின் செகரெட் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்க சுகாதார அமைச்சகம் இலக்காகக் கொண்டுள்ளதாக அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
“அமைச்சரவை முடிவு எடுக்கும் வரை நான் முன்னதாகக் கூற முடியாது. ஆனால் 2026ஆம் ஆண்டு முதல் பாதியிலோ அல்லது இரண்டாம் பாதியிலோ இந்தத் தடை நடைமுறைக்கு வரும். பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பினும், வேப்பிங் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குத் தெளிவான நிலைப்பாடு உள்ளது,” என அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பான விரிவான ஆய்வுகளை நிபுணர்கள் குழு மேற்கொண்டு வருவதாகவும், முடிவுகள் அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 10 அன்று டேவான் நெகாராவில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், மின்சிகரெட், வேப்புப் பொருட்களின் விற்பனைக்கு படிப்படியாகத் தடை விதிக்கப்படும் என்றும், முதலில் “ஓப்பன்-சிஸ்டம்” (open-system) வேப் சாதனங்களுக்கு தடை அமல்படுத்தப்பட்டு, பின்னர் அனைத்து வகை வேப் பொருட்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




















