ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: வருகிறது சூப்பர் வசதி

புதுடெல்லி,டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த யு.பி.ஐ. என்ற வங்கி கணக்கில் இருந்து செய்யப்படும் பரிமாற்றத்திற்கு பின் நம்பர், ஓ.டி.பி. போன்ற முறைகள் வழியாக இதுவரை பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இவற்றுக்கு அடுத்த கட்டமாக ஆதார் அடிப்படையிலான முகஅடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது.

தற்போதைய நிலையில் ஆதார் மூலம் முகஅடையாள சரிபார்ப்பு முறை அரசுத் துறைகள் மற்றும் நலத்திட்டங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய அரசுப் பணியாளர்களின் அலுவலக வருகை பதிவு, மூத்த குடிமக்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை வழங்குதல் மற்றும் அரசு திட்ட நிதி வழங்குதல் பணி போன்றவை அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதார் தரவுகளின் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 19.36 கோடி முகஅடையாள சரிபார்ப்பு முறைகள் நடந்துள்ளன.

இனி இந்த முகஅடையாள சரிபார்ப்பு முறையை வங்கி மற்றும் நிதி துறைகளில் செயல்படுத்திட முடிவு ஆதார் முகமை அனுமதி அளித்துள்ளது. எனவே அது சோதனை அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளது.அதனால் மக்கள் யு.பி.ஐ. வழியாக பணம் அனுப்பும்போது ரகசிய குறியீடு எண், அதாவது பின் நம்பர் தட்டச்சு செய்யாமல், முகத்தை கேமராவிற்கு காட்டினால் போதும் பணம் தானாக பரிமாற்றம் செய்யப்பட்டு விடும்.அதேபோல் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும்போது ஓ.டி.பி. அல்லது பின் நம்பர் தரவில்லை. நமது முகத்தை காட்டினாலே போதும். பணம் தானாக வெளியே வந்து விடும்.

இது தவிர கைரேகை முறையிலும் பணம் பரிமாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.ஆதார் முகஅடையாளம் வங்கி மற்றும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் அறிமுகம் செய்யப்பட்டால், “முகத்தை காட்டினாலே பணம் பரிமாறும் காலம்” இந்தியாவில் தொடங்க இருக்கிறது. மக்கள் வசதிக்காக இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here