கோலாலம்பூர்:
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட RON95 பெட்ரோலுக்கான மானியத் திட்டமான BUDI95 மூலம் இதுவரை 11 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் நன்மை பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 13 நிலவரப்படி பயனீட்டாளர்களின் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் — தகுதியுடைய எந்த குடிமகனும் திட்டத்திலிருந்து விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது என அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“e -wallet வசதி இல்லாதவர்கள் மற்றும் இணைய இணைப்பு குறைவான பகுதிகளில் வசிப்பவர்களும் புறக்கணிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும், MyKad டெர்மினல்களில் நேரடி தகுதி சரிபார்ப்பு, மற்றும் பெட்ரோல் நிலையங்களில் பணமாக மானியத் தொகை செலுத்தும் வசதிகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிதுவான் ரூபின், மத்திய தரவுத்தள மையமான PADU வழியாக RON95 மானிய தகுதி கணிப்பு மேற்கொள்ளப்படுவது சபா மாநில மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என்று, எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட பதிலில் அமைச்சகம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
மேலும் “2025 அக்டோபர் முதல் வாரம் வரை, 23,000-க்கும் மேற்பட்ட படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்கள் உரிமைகளை உறுதி செய்து, BUDI95 திட்டத்தின் கீழ் நன்மை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.





















