கோலாலம்பூர்:
சிலாங்கூரில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோதக் குப்பைக் கிடங்குகளை முற்றாக ஒழிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நில அலுவலகம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் (PBT) இணைந்து சட்டவிரோதக் குப்பைத் தளங்களைக் கண்டறிந்து அவற்றைத் தரைமட்டமாக்கும். இதற்காக மாநில மந்திரி பெசார் நேரடியாகக் களமிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
கித்தா சிலாங்கூர் 2026 (Kita Selangor 2026) சிறப்புத் திட்டத்தின் கீழ், கிராமங்களைச் சுத்தம் செய்யவும், அழகுபடுத்தவும் 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள பாரம்பரிய கிராமங்கள், புதிய கிராமங்கள் மற்றும் இந்தியக் குடியிருப்புகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றப் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று மந்திரி பெசார் அமினுடின் கூறினார்.
“குப்பை சேகரிப்பில் சிக்கல் என்றால் அது KDEB-யின் தவறு, அவர்கள் ஒப்பந்ததாரர்கள் மீது பழி போடுவது என ஒருவரை ஒருவர் கைகாட்டுவதை இனி ஏற்க முடியாது. இது அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு,” என்று அவர் எச்சரித்தார்.





















