கோலாலம்பூர்:
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு திருமணமான தம்பதியினரை பேரா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2,870,000 ரிங்கிட் மதிப்புள்ள மெத்தாம்பெத்தமைன் மற்றும் ரசாயனங்கள் என்பவற்றையும் பறிமுதல் செய்தனர்.
39 வயதான உள்ளூர் நபர், மாலை 5.15 மணிக்கு பொக்கோக் அசாமில் சாலையோரத்தில் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
அதேநேரத்தில் 26 வயதான பெண் அதே நாளில் தாமான் அசாமாராவில் உள்ள ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்.
அவர்களிடமிருந்து 5.06 கிலோகிராம் எடையுள்ள மெத்தாம் பெத்தமைன் என்று நம்பப்படும் ஆறு பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் , 84.75 லிட்டர் எடை கொண்ட திரவப் பொருளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் RM100,000 மதிப்புள்ள இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த தம்பதியினர் கடந்த ஆகஸ்ட் முதல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பேராக்கிற்கு வெளியே விநியோகிக்கப்படுவதற்காகவும், 51,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு வழங்குவதற்காகவும் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது!





















