மேற்கு கரையின் முக்கிய வரலாற்று தளத்தை அபகரிக்கும் இஸ்ரேல்.. ஒரே ஆண்டில் 32,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றம்

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.

குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

மேற்கு கரை ஆக்கிரமிப்பு:

இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.
அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.

இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.

மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.

அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here