ரெம்பாவ்:
ரெம்பாவ் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சூட்கேஸ் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம், மாயமான பெண் தொழிலதிபர் சூரி நருடின் (Suri Narudin) தான் என்பது டிஎன்ஏ (DNA) மற்றும் விரல் ரேகை சோதனைகள் மூலம் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து 53 வயதான சூரியின் மருமகன் மிசான் (41) கூறுகையில், சடலம் கண்டெடுக்கப்பட்ட மூன்றாவது நாளிலேயே அது தனது அத்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் தங்களுக்கு வலுத்ததாகத் தெரிவித்தார்.
“அந்த சடலம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் எனது அத்தைக்கு (Mak Su) சொந்தமானது. உயிரிழந்தவர் எனது அத்தை தான் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. விரல் ரேகைகள் மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் உண்மையை விரைவாகக் கண்டறிந்த போலீஸாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
சூரியின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சூரியின் நெருங்கிய தோழியும் பாடகியுமான மேக் ருஹாயு முகமட் நோர் (Mac Ruhayu Mohd Nor) உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு நேரில் வந்திருந்தனர்.
“எனது அத்தை மிகவும் அன்பானவர், தாராள குணம் கொண்டவர் மற்றும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இந்தச் செயலைச் செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்,” என்று மிசான் உருக்கமாகத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி, ரெம்பாவ், கம்போங் பத்து 4 பெடாஸ் (Kampung Batu 4 Pedas) பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அருகே புதைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் தேசிய பதிவுத் துறையின் (JPN) விரல் ரேகை பதிவுகள் மற்றும் வேதியியல் துறையின் டிஎன்ஏ அறிக்கை மூலம் உயிரிழந்தது சூரி நருடின் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைமை ஆணையர் டத்தோ அல்சாப்னி அமாட் தெரிவித்தார்.



















