அமெரிக்கா: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – தெலுங்கானாவை சேர்ந்த 2 பேர் பலி

வாஷிங்டன்,தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் கர்லா மண்டல் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்கள் மஹானா ராணி (வயது 24), புவனா (வயது 24). ஒரே கிராமத்தை சேர்ந்த இருவரும் தோழிகள் ஆவர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கா சென்றனர். இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு நிறைவு செய்தனர். தற்போது அமெரிக்காவில் வேலை தேடி வந்தனர்.

இந்நிலையில், இளம்பெண்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் மேலும் 4 பேருடன் நேற்று அமெரிக்காவின் அலபாமா பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றுவிட்டு காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here