மார்கழி மாத ஆருத்ரா தரிசனம்

உலகின் முதல் சிவன் கோவில் என்றும், உலகிலேயே மிகப் பெரிய மரகத நடராஜர் இருக்கும் கோவில் என்றும் சிறப்பு பெற்றது திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ள மங்களநாதர் திருக்கோவில். இக்கோவில் மிக சிறப்பாக நடைபெறும் உற்சவங்களில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிக முக்கியமான ஒன்றாகும். வருடத்தின் அனைத்து நாட்களும் சந்தன காப்பு இடப்பட்டு காட்சி தரும் நடராஜ பெருமானை, ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே மரகத திருமேனியாக தரிசனம் செய்ய முடியும்.

மார்கழி மாதத்தில் வரும் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம் அன்று நடராஜ பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர். வருடத்தில் ஆறு முறை மட்டுமே நடராஜருக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். அவற்றில் மிக முக்கயமான திருநாள் தான் ஆருத்ரா தரிசனம். இது அனைத்து சிவன் கோவில்களிலும் மிக விசேஷமாக நடத்தப்படும் என்றாலும், உத்திரகோசமங்கையில் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மரகத நடராஜரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம்.2026ம் ஆண்டில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 03ம் தேதியன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.

 

இதற்காக ஜனவரி 02ம் தேதி காலை 8 முதல் 9 மணிக்குள் மரகத நடராஜரின் சந்தனம் களைக்கப்பட்டு, மரகத திருமேனியாக காட்சி அளிப்பார். அதற்கு பிறகு அன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 03ம் தேதின்று அதிகாலை 2 மணி வரை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். பிறகு மீண்டும் சந்தனம் சாற்றப்பட்டு, ஜனவரி 03ம் தேதியன்று அதிகாலை 04.30 மணி முதல் 5 மணிக்குள் தீபாராதனை நடைபெறும். பிறகு ஜனவரி 03ம் தேதி இரவு வரை சந்தனம் சாத்தப்பட்ட திருமேனியுடன் நடராஜ பெருமான் காட்சி அளிப்பார்.

 

ஆருத்ரா தரிசனம் அன்று சிவ பெருமானுக்கு திருவாதிரை களி படைத்து வழிபடுவது விசேஷமானதாகும். சேந்தனார் என்ற சிவனடியார் விறகுகளை வெட்டி விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவு அளித்த பிறகு தான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் பெய்த மழையால் விறகுகள் நனைந்து விட்டதால் தன்னிடம் இருக்கும் அரிசி, வெல்லத்தை வைத்து களி சமைத்து, சிவனடியாரின் வருகைக்காக காத்திருந்தார். வெகு நேரமாகியும் யாரும் வராததால் வருத்தத்தில் இருந்த அவரது மன வேதனையை போக்கவும் அவருக்கு அருள் செய்யவும் நினைத்த சிவ பெருமான் தானே சிவனடியாராக வந்து சேந்தனாரின் இல்லத்தில் களி சாப்பிட்டு விட்டு, மறு வேளைக்கு எடுத்துச் சென்றார்.

 

அடுத்த நாள் அந்த ஊர் கோயிலில் இருந்த நடராஜரின் முன் களி சிதறல்கள் கிடப்பதை கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்த போது, தானே சேந்தனாரின் வீட்டில் களி உண்டதாக அசரீரி ஒளித்தது. பக்தனுக்கு அருள் செய்ய ஈசன் வந்த இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த நாளில் ஆருத்ரா தரிசன விழா நடத்தப்பட்டு, சிவனுக்கு களி படைத்து வழிபடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here