யுபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள்: நாளை முக்கிய அறிவிப்பு!

கோலாலம்பூர்:

ரத்து செய்யப்பட்ட யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 பொதுத் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்த இறுதி முடிவை கல்வி அமைச்சு நாளை அறிவிக்கவுள்ளது.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெறவுள்ள ‘தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035’ (RPN 2026-2035) தொடக்க விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் கூறுகையில், “இந்த முடிவு கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், மாணவர்களின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒரு முழுமையான மதிப்பீட்டு முறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது,” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டால், அவை பழைய முறையிலேயே இருக்குமா அல்லது தற்போதைய காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய வடிவில் (உதாரணமாக, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில்) இருக்குமா என்பது நாளை தெரியவரும்.

2021 மற்றும் 2022-இல் இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, மாணவர்களின் கல்வித் தரத்தை அளவிடுவதற்குத் தற்போதைய பள்ளி அளவிலான மதிப்பீட்டு முறை (PBD) போதுமானதாக இல்லை என்று பெற்றோர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் (குறிப்பாக அம்னோ) தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்காக ‘தேசிய கல்வி ஆலோசனைக் குழு’ (MPPK) அமைக்கப்பட்டு, நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன.

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பொதுச்சபையில், மாணவர்களின் அடிப்படைத் திறனை உறுதிப்படுத்த இந்தத் தேர்வுகள் அவசியம் என்று துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தியிருந்தார்.

நாளை வெளியிடப்படவுள்ள 10 ஆண்டுகாலக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தில், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான முக்கிய வரைபடங்கள் இடம்பெறும் என்று அமைச்சர் பட்லினா உறுதிபடக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here