கோலாலம்பூர்:
பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியிலிருந்து மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) வெளியேறப்போவதாகப் பரவி வரும் தகவல்களை, அக்க கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் வெறும் ஊகம் என்று கூறி நிராகரித்துள்ளார்.
MIC கூட்டணியை விட்டு வெளியேறுவது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பாரிசான் நேஷனல் தலைமைக்கு கிடைக்கவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
BN தலைமைத்துவத்திற்கும் MIC-க்கும் இடையிலான உறவு இன்னும் பலமாகவே இருப்பதாகவும், இது தொடர்பாக எந்தவொரு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கோத்தா கினபாலுவில் நடைபெற்ற BN உச்சமன்றக் கூட்டத்தில் MIC பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததற்கு, கால அட்டவணை முரண்பாடுகளே (Scheduling conflict) காரணம் என்று ஜம்ரி விளக்கமளித்தார்.
இக்கூட்டத்தில் மக்கள் முற்போக்கு கட்சி (PPP) மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது. மேலும், டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் சபா மாநில BN தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு துணைப் பிரதமரும் பாரிசான் நேஷனல் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்றது.




















