மாதத்திற்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை; சம்பளப் பட்டியலும் இல்லை: தொழிலாளர்கள் வேதனை!

ஷா ஆலம்:

ஷா ஆலமில் உள்ள கூரியர் நிறுவனத்தில் நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையான ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, ஏஜெண்டுகள் (முகவர்கள்) மூலம் பணியமர்த்தப்பட்ட பகுதிநேரத் தொழிலாளர்கள் பலரிடம் முறையான பணி நியமனக் கடிதமோ அல்லது சம்பளப் பட்டியலோ (Payslip) இல்லை என்பது தெரியவந்தது.

30 வயதான பாகிஸ்தான் தொழிலாளி ராட்ஸி (Rodzi) கூறுகையில், ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலைக்கு அவருக்கு வெறும் 60 ரிங்கிட் மட்டுமே வழங்கப்படுகிறது. மலேசியாவின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியத்தை விட இது மிகக் குறைவாகும்.

“எனக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. வாராந்திர விடுமுறை முறையே இல்லை,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இவர் தனது வருமானத்தில் சுமார் 1,000 ரிங்கிட்டை பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பிவிட்டு, எஞ்சிய பணத்தில் சிக்கனமாக வாழ்வதற்காக அலுவலகத்திற்கு நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ செல்வதாகக் கூறினார்.

36 வயதான அம்ரி (Amri) என்ற உள்ளூர் தொழிலாளியும் தனக்குச் சம்பளப் பட்டியல் வழங்கப்படுவதில்லை என்றும், சாதாரண நாட்களில் 60 ரிங்கிட்டும், பொது விடுமுறை நாட்களில் 70 ரிங்கிட்டும் மட்டுமே கூலியாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

சம்பளப் பட்டியல் வழங்காதது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை மீறியது மற்றும் முறையான பணி ஒப்பந்தம் இல்லாதது போன்ற குற்றங்களுக்காக அந்த நிறுவனத்தின் மீது தொழிலாளர் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here