கோலாலம்பூர், பிப்ரவரி 3:
மலேசிய அரசியலமைப்பின் 42-வது பிரிவின் கீழ் மன்னருக்கு வழங்கப்பட்டுள்ள ‘மன்னிப்பு வழங்கும் அதிகாரம்’ குறித்துப் பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாவுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா விளக்கம் அளித்தார்.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் என்பது ஒரு முறையான அரசியலமைப்புச் சார்ந்த சட்ட நடைமுறையாகும். இதை உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அரசியல் கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. “மன்னிப்பு வழங்குவது என்பது யாருக்கோ கொடுக்கப்படும் அரசியல் பரிசோ அல்லது தனிப்பட்ட முறையில் காட்டப்படும் அனுதாபமோ கிடையாது. இது ஒரு நீதி அமைப்பின் ஒரு அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.
மன்னிப்பு முடிவுகள் மன்னரால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படுவதில்லை. இதில் மன்னிப்பு வாரியத்தின் (Pardons Board) விரிவான ஆலோசனைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் உள்ளடங்கியுள்ளன.
இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு அரசியல் கட்சிக்கோ மட்டும் உரித்தானதல்ல. ஒவ்வொரு ஆண்டும், சிறிய மற்றும் பெரிய குற்றங்களைச் செய்த நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு அவர்களின் பின்னணியைப் பொறுத்து மன்னிப்பு வழங்கப்படுகிறது.
மன்னர் என்பவர் எவ்வித அரசியல் அழுத்தத்திற்கும் அல்லது பொதுமக்களின் உணர்ச்சிகளுக்கும் அடிபணிந்து செயல்படுவதில்லை. நாட்டின் நீதியைக் காக்கும் ஒரு ‘குடையாக’ (Canopy of Justice) இருந்து, சமூகத்தில் பதற்றங்கள் ஏற்படும்போது சமநிலையை மீட்டெடுப்பதே மன்னரின் பணி என அவர் குறிப்பிட்டார்.
“இந்த நாடு சமூக வலைதளங்களின் உணர்ச்சிகளால் ஆளப்படுவதில்லை. சட்டம் மற்றும் அரசியலமைப்பைத் தாண்டி பொதுமக்களின் கோபமோ அல்லது அரசியல் மேடைகளோ நீதி வழங்க முடியாது,” என அவர் அழுத்தமாகக் கூறினார்.
பகாங் மாநில அரசப் பிரதிநிதிகள் குழுவின் (Pahang Council of Regency) 120-வது கூட்டத்தில் அவர் இந்த உரையை ஆற்றினார். இக்கூட்டத்தில் பகாங் இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராகிம் ஆலம் ஷா அவர்களும் கலந்துகொண்டார்.

























