திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்

கோலாலம்பூர் | 22 பிப்ரவரி 2026 –

திரெங்கானு மாநில ஆட்சிக்குழு (Exco) உறுப்பினர் ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான எந்தவொரு விசாரணைக்கும் தங்கள் கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும் என பாஸ் (PAS) கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தனது பிள்ளைகளை அரசு சார்ந்த நிறுவனங்களில் (GLC) உயர் பதவிகளில் பணியமர்த்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு ஆணையம் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து அவரைக் கைது செய்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான், கட்சி எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

“எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே. அதிகார முறைகேடு தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்க பாஸ் கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. விசாரணை அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க எமது உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்,” என்று அவர் உறுதிப்படக் கூறினார்.

திரெங்கானு மாநில அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, மாநிலத்தில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. விசாரணை முடிவடைந்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் குறித்துத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here