பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும்

பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் புனித நாளே மாசி மகம். இந்த நாள், பாவ நிவாரணம், பித்ரு கடன் நிவர்த்தி, தீர்த்த ஸ்நானம் ஆகியவற்றுக்கு மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கும்பகோணம் நகரில், கும்பேஸ்வரர் கோயில் அருகிலுள்ள மகாமகக் குளத்தில் நீராடுவது இந்த நாளின் முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது.

வருடத்திற்கு ஒருமுறை வருவதை மாசி மகம் என சொல்லுதை போல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதை மகாமகம் என்கிறோம். இந்த நாளில் இந்த குளத்தில் நீராடுவது உலகில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை தரும் என்கிறார்கள். மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் புண்ணிய நதிகள் எழுந்திருளுவதாக ஐதீகம். அதனால் தான் இந்த நாளில் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

புராணங்களின் படி, பிரம்மதேவரின் அருள்வாக்கின் படி, பன்னிரண்டு புனித தீர்த்தங்களின் தெய்வீகச் சக்திகள் மகாமகக் குளத்தில் சங்கமிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், அந்த நாளில் மகாமகக் குளத்தில் நீராடுவது அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம் என போற்றப்படுகிறது.

அனைவரின் பாவங்களையும் போக்கும் புண்ணிய நதிகளான கங்கை, காவிரி போன்ற நதிகள், மனிதர்கள் வருடம் முழுவதும் நீராடி தங்களில் கரைத்த பாவங்களை போக்கிக் கொண்டு, மீண்டும் தங்களின் புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக மாசி மகத்தன்று, கும்பகோணம் மகாமகம் குளத்தில் வந்து நீராடுவதாக ஐதீகம்.

மாசி மக நாளில் சிவபெருமான், பார்வதி தேவி மட்டுமன்றி முருகப்பெருமான் வழிபாடும் சிறப்பிடம் பெறுகிறது. முருக பக்தர்கள், புத்திர பாக்கியம் வேண்டி விரதமிருந்து வழிபடுவர். மகம் நட்சத்திரம் பித்ரு தேவ நட்சத்திரம் எனப் போற்றப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதும், அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் சிறப்பானது.

மாசி மகம் நாளில் தான் கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட பூமியை வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு மீட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் மாசி மகத்தன்று பெருமாளை வழிபடுவதும் நன்மை தரும். மாசி மகம் அன்று பார்வதி தேவி, தாட்சாயணியாக அவதரித்ததாக சொல்லப்படுவதால் இந்த நாளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பார்வதியின் அம்சமாக கருதி மங்கல பொருட்களை தானமாக வழங்குவது நல்லது.

சாஸ்திரங்கள், மாசி மக தினத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவதை “பித்ரு மகா ஸ்நானம்” என்று குறிப்பிடுகின்றன.இந்த நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் அமிர்தத் தன்மை கலந்திருக்கும் என்பது ஐதீகம். குளம், ஆறு, கடல் என எந்தத் தீர்த்தத்திலும் நீராடுவது பாவங்கள், தோஷங்கள் நீங்க, முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்க, நமக்கும் ஆரோக்கியம், நன்மைகள் பெருக உதவும் என்று நம்பப்படுகிறது.

மாசி மகத்தன்று, நீர்நிலைகளருகே தர்ப்பணம் அளிப்பதால், ஏழு தலைமுறையிலான பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய பாவங்களை போக்கி, புண்ணியங்களை அதிகரிப்பதற்கான புனிதமான நாளாக மாசி மகம் விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here