இலங்கை அருகே ஈரானியப் போர்க்கப்பல் மீது தாக்குதல்: 101 பேர் மாயம், மீட்புப் பணிகள் தீவிரம்

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ (IRIS Dena) எனும் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (மார்ச் 4) நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 78 பேர் காயமடைந்துள்ளதுடன், குறைந்தது 101 மாலுமிகளைக் காணவில்லை என இலங்கைக் கடற்படையும் தற்காப்பு அமைச்சும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலை நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது குறித்து இலங்கை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

தாக்குதலுக்குள்ளான இந்தப் போர்க்கப்பல், இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு ஈரான் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் விபரீதம் நிகழ்ந்துள்ளது. கப்பலில் இருந்து வந்த அவசர உதவி அழைப்பைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கைகளைத் முடுக்கிவிட்டது.

பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து இதுவரை 32 மாலுமிகள் மீட்கப்பட்டு, இலங்கையின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எழுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி டாக்டர் அனில் ஜெயசிங்கே தெரிவித்துள்ளார். காயமடைந்த மற்றவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மீட்புப் பணிகளுக்காக இலங்கைக் கடற்படையின் இரண்டு கப்பல்களும் ஒரு விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காணாமல் போன 101 மாலுமிகளைத் தேடும் பணி சர்வதேச கடல்துறை விதிகளுக்கு உட்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கடற்படைப் பேச்சாளர் புதிக்கா சம்பத் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆழ்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியுள்ளதால் தேடுதல் பணியில் சவால்கள் நீடிப்பதாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதல் குறித்த பின்னணி விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் விடுத்த அறிக்கை ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது. ஈரானியக் கடற்படைக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 10 ஈரானியக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்கு அருகே நடந்த இந்தச் சம்பவம் அந்தத் தாக்குதல்களின் ஒரு பகுதியா என்பது குறித்து இன்னும் தெளிவான ஆதாரங்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here