அரச குடும்பத்தின் பெயரில் 10,000 போலி கணக்குகள் முடக்கம்! மோசடிகளைத் தடுக்கத் தொடர்புத்துறை அமைச்சு அதிரடி

கோலாலம்பூர் | மார்ச் 31, 2026

மாமாமன்னர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim), பேரரசியார் ராஜா ஜரித் சோபியா (Raja Zarith Sofiah) மற்றும் அரச குடும்பத்தினரின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 10,000-க்கும் மேற்பட்ட போலி சமூக வலைதளக் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த போலி கணக்குகள் அரச குடும்பத்தினரின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பண மோசடி மற்றும் ‘ஸ்கேம்’ (Scams) போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தன என்று, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் (Datuk Fahmi Fadzil) கூறினார்.

இந்த 10,000 கணக்குகளில், பகாங் மாநில அரச குடும்பத்தினரின் பெயரில் இயங்கி வந்த போலி கணக்குகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் சமீபகாலமாகப் பொதுமக்களை ஏமாற்றுவதற்காகப் பிரபலங்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களைப் பயன்படுத்திப் போலி கணக்குகள் தொடங்குவது அதிகரித்துள்ளது.

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) சமூக வலைதள நிறுவனங்களுடன் இணைந்து இத்தகைய கணக்குகளைக் கண்டறிந்து முடக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பகாங் அரண்மனை ஏற்கனவே தங்களின் பெயரில் இயங்கும் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரச குடும்பத்தினர் எவ்வித நிதி சார்ந்த உதவிகளையோ அல்லது முதலீட்டுத் திட்டங்களையோ சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பதில்லை என்பதால், பொதுமக்கள் இத்தகைய போலி கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here