பெண்ணைத் தாக்கிய இந்தோனேசியருக்கு 14 மாத சிறை! அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியதால் அதிரடித் தீர்ப்பு

பத்து பாஹாட் | ஏப்ரல் 1, 2026

தனது பெண் துணையைத் தாக்கியது மற்றும் விசா காலாவதியான பிறகும் மலேசியாவில் தங்கியிருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், 38 வயது இந்தோனேசிய ஆடவருக்குப் பத்து பாகாட் நீதிமன்றம் 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சுதிர்மான் (Sudirman) என்ற அந்த நபர், மார்ச் 22-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் ஸ்ரீ மேடான் (Sri Medan) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது 56 வயது பெண் துணையுடன் பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், அந்தப் பெண்ணின் முகத்தில் பலமுறை குத்தியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மார்ச் 23-ஆம் தேதி அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் தங்கியிருந்ததும் (Overstaying) அம்பலமானது.

இன்று மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் (Arun Noval Dass) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், சுதிர்மான் தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றச்சாட்டில் தண்டனைச் சட்டம் பிரிவு 323-இன் கீழ், பெண்ணை தாக்கியதற்காக 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில் குடியேற்றச் சட்டம் 1959/63-இன் கீழ், அவருக்கு 13,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் 8 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான சுதிர்மானால் நீதிமன்றம் விதித்த மொத்தம் 15,000 ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக, அவர் மொத்தம் 14 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க சிறைக்கு அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here