ஜோகூர்பாரு:
நெடுஞ்சாலையில் கார் பழுதாகி தனது குடும்பத்துடன் தவித்துக் கொண்டிருந்த மலாய்க்காரர் ஒருவருக்கு, ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து உதவிய சம்பவம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலாக்காவிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலாய்க்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக கார் பழுதாகி சாலையின் நடுவிலேயே நின்றுவிட்டது. அதிவேகமாக வாகனங்கள் செல்லும் அந்தப் பகுதியில், கார் நடுரோட்டில் நின்றதால் அந்தத் தந்தை தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார்.
அந்தச் சமயத்தில், மலாக்காவிலிருந்து ஜோகூர் பாருவில் நடைபெறவிருந்த ஐயப்ப சுவாமி பூஜையில் கலந்துகொள்வதற்காக ஐயப்ப பக்தர்கள் சிலர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தனர். காரின் நிலைமையையும், அக்குடும்பத்தின் தவிப்பையும் கண்ட பக்தர்கள், உடனடியாகத் தங்கள் வாகனங்களை நிறுத்தி உதவிக்கு விரைந்தனர்.
பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற அந்த வாகனத்தைப் பாதுகாப்பாகத் தள்ளிச் சென்று சாலையோரம் நிறுத்தினர்.
சரியான நேரத்தில் தங்களுக்கு உதவிய ஐயப்ப பக்தர்களின் மனிதாபிமானத்தைக் கண்டு அந்த மலாய்க்காரர் நெகிழ்ந்து போனார். மொழி மற்றும் மதத் தடைகளைத் தாண்டி மனிதாபிமானமே முதன்மையானது என்பதை உணர்த்தும் வகையில், அவர் தனது இரு கைகளையும் உயர்த்தி அந்தப் பக்தர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை (Muhibbah) இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை இந்த ஐயப்ப பக்தர்கள் செயலில் காட்டியுள்ளதாகப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





















