2026 சட்டமன்றத் தேர்தல்: போட்டியிடப்போவதில்லை எனத் திருமாவளவன் அதிரடி அறிவிப்பு

சென்னை | ஏப்ரல் 5, 2026:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் துணை முதல்வர் பதவியைக் குறிவைப்பதாகவோ அல்லது தொங்கு சட்டசபை அமையும் என்ற எதிர்பார்ப்பில் களம் இறங்குவதாகவோ பரப்பப்படும் செய்திகளை முற்றிலுமாக மறுத்தார்.

தான் பெரிய பதவிகளை எதிர்பார்ப்பதாகக் கூறப்படும் தகவல்கள் “அடிப்படையற்றவை” என்றும், தனது அரசியல் நேர்மையைக் கொச்சைப்படுத்தவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கூட்டணியைப் பிரிக்க நயவஞ்சக முயற்சிகள் நடப்பதாகவும் அவர் சாடினார்.

‘ஆட்சியில் பங்கு’ என்பது கட்சியின் நீண்டகாலக் கொள்கையாக இருந்தாலும், இந்தத் தேர்தலில் அதனை ஒரு கோரிக்கையாக தாங்கள் முன்வைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தான் முன்பு போட்டியிட்ட காட்டுமன்னார் கோயில் தொகுதியில், மறைந்த மூத்த தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் எனத் திருமாவளவன் அறிவித்தார்.

ஆளூர் ஷாநவாஸுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், வேட்பாளர் தேர்வு என்பது முழுக்க முழுக்க சமூகநீதி அடிப்படையிலேயே நடைபெற்றது என்றும், இதில் யார் தலையீடும் இருக்க முடியாது என்றும் கூறினார்.

“பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்பதை எனது கடந்த கால தியாகங்களே பறைசாற்றும். விளிம்புநிலை மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம்,” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்த முடிவு, அவர் தனிப்பட்ட பதவிகளை விடக் கூட்டணியின் வெற்றிக்காகவும், மாநிலம் தழுவிய பிரசாரத்திற்காகவும் முன்னுரிமை அளிக்கிறார் என்பதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here