மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரத் தொழில்: ஷா ஆலமில் 11 வெளிநாட்டினர் கைது!

ஷா ஆலம்:

ஷா ஆலம், புக்கிட் ரிமாவ் (Bukit Rimau), பிரிவு 32-இல் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை மலேசியக் குடிவரவுத் துறை (Immigration Department) நேற்று இரவு நடத்திய அதிரடிச் சோதனையில் முறியடித்துள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில், குடிநுழைவுத் துறையின் 37 அமலாக்க அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு அறையிலும் மெத்தைகள் அமைக்கப்பட்டு, சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த மசாஜ் சென்டர்கள் 40 ரிங்கிட் முதல் தொடங்கும் மசாஜ் பேக்கேஜ்களையும், 200 ரிங்கிட் வரையிலான பாலியல் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்துள்ளன.

சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் கைருல் அமினுஸ் கமருதீன் (Khairrul Aminus Kamaruddin) தெரிவிக்கையில், இந்த கும்பல் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களுக்குப் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு, அவர்கள் விரும்பும் பெண்ணைத் தேர்வு செய்த பிறகு, கடைக்கு வந்து மசாஜ் மற்றும் விபச்சார சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் 18 முதல் 40 வயதுடைய 11 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: அதில்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 4 பேர், சீனாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்கள் முறையான பயண ஆவணங்கள் இன்மை, விசா காலம் முடிந்து தங்கியிருத்தல் (Overstaying) மற்றும் குடிநுழைவுச் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களைச் செமினி (Semenyih) குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தில் மறைமுகமாக நடைபெறும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைக் களையத் தொடர்ந்து சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்று குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here