கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துங்கு முக்ரிஸ் பதவியிறக்கம் செய்யப்பட்டதாக ‘உண்டாங் யாங் எம்பாட்’ (Undang Yang Empat) அறிவித்தது சட்டப்படி செல்லுபடியாகும் என முன்னாள் மந்திரி பெசார் ராயிஸ் யாதிம் தெரிவித்துள்ளார்.
1959-ஆம் ஆண்டு மாநில அரசமைப்புச் சட்டத்தின் 10-வது பிரிவின்படி, முறையான புகார்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதில் மந்திரி பெசார் சாட்சியாகக் கையெழுத்திடுவது கட்டாயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், உண்டாங் சுங்கை உஜோங் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக மந்திரி பெசார் அறிவித்தது அதிகார வரம்பை மீறிய செயல் என்றும், ‘நீதி மற்றும் உண்டாங் மன்றத்திற்கு’ (DKU) அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் அவர் மலேசியாகினியுடனான நேர்காணலில் கூறினார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட ராயிஸ் யாதிம், மாநிலத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இப்பிரச்சினைக்கு சுமூகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.





















