கோலாலம்பூர்:
ஜோகூர், இஸ்கண்டார் புத்திரியின் செனாய் நோக்கிய இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஒரு மலேசியரும் ஒரு இந்தியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிகாலை மணி 5.40 அளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த இருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழக்க, மற்றொருவர் பாலத்திற்கு அடியில் விழுந்து பலியானதாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம்.குமரேசன் உறுதிப்படுத்தினார்.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாகத் தற்பொழுது இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இது தொடர்பான தகவல் அறிந்த பொதுமக்கள் இஸ்கண்டார் புத்திரி போக்குவரத்துப் புலனாய்வுத் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




















