தெனோம்:
படாஸ் (Padas) ஆற்றுப் பகுதியில் உள்ள பாங்கி நீர்மின் நிலைய அணை அருகே, கடந்த சில நாட்களாகத் தேடப்பட்டு வந்த 19 வயது மாணவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவர் திடீரென மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து டெனோம் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அகமது ரசாலி ஷாரி கூறுகையில், “காணாமல் போன மாணவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 8.54 மணியளவில் அணை பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆற்றில் ஒரு உடல் மிதப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் அளித்தனர்,” என்று தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட உடல் அந்த மாணவருடையது தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் எவ்வித குற்றச்செயல்களுக்கான ஆதாரங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ (SDR) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















