ஜோகூர் பாரு:
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 33 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை (மே 13) இரவு சுமார் 11.12 மணியளவில் போலீசாருக்கு இது குறித்த அவசர அழைப்பு கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு தொழில்நுட்பவியலாளராக (Technician) பணியாற்றி வந்த ஆடவர் ஒருவர் இரத்தக் கறைகளுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் (OCPD) உதவி ஆணையர் ராவுப் செலாமாட் கூறுகையில், அந்த நபர் மே 13, இரவு சுமார் 10.50 மணியளவில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக கூறினார்.
உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் (கொலை குற்றம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலையின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் இக்கொலை எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஹாட்லைன் எண்ணிற்கு (07-2182323) தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




















