உலு சிலாங்கூரில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதுச் சிறுவன் மாயம் ! தேடுதல் வேட்டை தீவிரம் !

கோலாலம்பூர்:

மலேசியாவில் ஆறுகளில் மூழ்கிச் சிறுவர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், இன்று பிற்பகல் சிலாங்கூர், உலு சிலாங்கூரில் உள்ள சுங்கை நிலாம் (Sungai Nilam) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 10 வயதுச் சிறுவன் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.

அச்சிறுவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் படையினர் தற்போது ஆற்றில் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை (Search and Rescue Operation) முடுக்கிவிட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் சுமார் 1.40 மணியளவில், சுங்கை நிலாம் ஆற்றில் சிறுவன் நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதாகத் தீயணைப்புத் துறைக்கு அவசரக் கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தகவல் கிடைத்தது என்று, இச்சம்பவம் குறித்துச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே, கோலா குபு பாரு (Kuala Kubu Baru) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புப் படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த 10 வயதுச் சிறுவன் ஆற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆற்று நீரின் வேகம் அதிகரித்ததால் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

தற்போது அக்குறிப்பிட்ட ஆற்றுப் படுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்புத் துறையின் சிறப்புப் பிரிவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆறுகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் பலத்த நீரோட்டங்களில் சிக்கிப் பலியாகி வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here