கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான், கெமாஸ் (Gemas) தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ரிட்சுவான் அகமட் (Ridzuan Ahmad), தம்பின் (Tampin) தொகுதி பெர்சத்து கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று (ஜூலை 11, 2026) நடைமுறைக்கு வரும்வகையில் உடனடியாக விலகியுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆழமான பரிசீலனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள ரிட்சுவான், தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆதரவளித்த கட்சியின் தலைமைத்துவத்திற்கும் தொகுதி உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமீப நாட்களாக பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் தங்களது பதவிகளைத் துறந்து வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது:
நேற்று, அஜிமான் ஹாதி நஸ்ரி பெர்சத்து கட்சியின் அர்மடா (Armada) தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் உச்ச மன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகினார்.
அபு பக்கர் ஹம்சா ,மார்சிதா மன்சூர், அசஹார் ஹசான் ஆகியோரும் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாகப் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வரும் வேளையில், பெர்சத்து கட்சியின் இந்த அடுத்தடுத்த ராஜினாமாக்கள் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


















