( ரெ.மாலினி)
மலாக்கா:
ஜோங்கர் வாக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 14 வயது சிறுமி, தற்கொலை முயற்சியாக தனது கழுத்தும் கைகளும் அறுத்துக் கொண்ட சம்பவத்தில், அவள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் “மஷ்ரூம் வேப்” காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்ததாவது, கடந்த மே 24ஆம் தேதி இரவு 10.33 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு முன், 49 வயதுடைய தத்தெடுத்த தாய், 17 வயது காதலனுடன் வெளியே செல்ல சிறுமியைத் தடுத்துள்ளார்.
இதனால் மனஅழுத்தத்திற்கு உள்ளான சிறுமி, தனது காதலன் வழங்கியதாக நம்பப்படும் “மஷ்ரூம் வேப்” பயன்படுத்திய நிலையில் இருந்திருக்கலாம் என்றும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.



















