ஜோகூர்
ஜோகூர் மாநில சட்டமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (தேசிய முன்னணி) மீண்டும் தனது தனிப்பெரும்பான்மையைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு ஜோகூர் சுல்தான், இப்ராகிம் இஸ்கந்தர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சட்டமன்றம் கலைக்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று (ஜூன் 1) அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஜோகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.கலைக்கப்பட்ட 56 இடங்க
ளைக் கொண்ட ஜோகூர் சட்டமன்றத்தில், தேசிய முன்னணி 40 இடங்களைப் பெற்று வலுவான தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தது. தற்போது கட்சிக்குள் நிலவும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க அம்னோ வியூகம் வகுத்துள்ளது. குறிப்பாக, அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட/விலகிய முன்னாள் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பியிருப்பது, அதிலும் இருவர் ஜோகூரைச் சேர்ந்தவர்கள் என்பது அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.
நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு:
இந்தத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய முக்கியக் கூட்டணிகளுடன் புதிய ‘பெர்சாமா’ (Bersama) கட்சியும் அறிவித்துள்ளதால், ஜோகூரில் கடுமையான நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திடீர் கலைப்பு நடவடிக்கை, கூட்டாட்சி (மத்திய) அளவில் பக்கத்தான் ஹரப்பான் (PH) மற்றும் தேசிய முன்னணி (BN) ஆகிய கூட்டணிகளுக்கு இடையே நிலவி வரும் அரசியல் உறவில் மேலும் விரிசலையும் இறுக்கத்தையும் ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த சட்டமன்றத்தில் வெறும் 12 இடங்களை மட்டுமே கொண்டிருந்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி, தற்போது பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. நேர்மை, இனம் மற்றும் சமயம் சார்ந்த தொடர் சர்ச்சைகளால், நகர்ப்புற முற்போக்குவாதிகள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்ட தங்களின் முக்கிய ஆதரவுத் தளத்தை பக்கத்தான் ஹரப்பான் பெருமளவில் இழந்து வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கூட்டணி உள்ளது.





















