கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலாகப் பரவி வரும் இஸ்லாமியப் புதிய தழுவல்களுக்கான ‘சௌடாரா பஹாரு’ அல்லது ‘முவலாஃப்’ பதிவு தொடர்பான போஸ்டருக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகமான உப்சி மறுத்துள்ளது.
ஜூன் 15 ஆம் தேதியிட்ட அந்த போஸ்டர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் பரிசீலனைக்கோ அல்லது ஒப்புதலுக்கோ ஒருபோதும் கொண்டு வரப்படவில்லை என்றும், அது உப்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் எவற்றையும் பயன்படுத்தாமல் பரப்பப்பட்டுள்ளது என்றும் பல்கலைக்கழகம் அதன் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைப் பல்கலைக்கழகம் மிகவும் தீவிரமாகக் கருதுவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டது.
மேலும், பொதுமக்கள் எப்போதும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வழி வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என அறிவுறுத்திய உப்சி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகையச் செயல்களை எதிர்கொள்வதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளது.





















