மலாக்காவில் சாலை விபத்து: ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி இஸ்மாயில் லேசான காயங்களுடன் தப்பினார்!

கோலாலம்பூர்:

மலாக்கா, அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், ஜாசின் (Jasin) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மலாக்கா மாநில பாஸ் (PAS) கட்சியின் ஆணையருமான சுல்கிப்ளி இஸ்மாயில் காயமடைந்தார்.

இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததை அலோர் காஜா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அகமட் அபு பக்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையின்படி, சுல்கிப்ளி இஸ்மாயில் ஜெலாடாங் (Jelatang) போக்குவரத்து சிக்னல் சந்திப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, அலோர் காஜாவிலிருந்து காடெக் (Gadek) நோக்கிச் சென்ற ‘பெரோடுவா ஆக்சியா’ (Perodua Axia) கார் ஒன்று திடீரென சந்திப்பிற்குள் நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“இந்த விபத்தில் ஜாசின் எம்பியின் இரு கைகளிலும் லேசான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது முன் இருக்கையில் பயணித்த அவரது மனைவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது” என்று காவல்துறை கண்காணிப்பாளர் அகமட் தெரிவித்தார்.

எனினும், ஆக்சியா காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு விலா எலும்பு மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். அவர் தற்போது மலாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த காரில் இருந்த மற்ற மூன்று பயணிகளுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அலோர் காஜா மருத்துவமனை மற்றும் மலாக்கா மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்விபத்து குறித்து, அலட்சியமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்கான ‘1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1)’-இன் கீழ் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here