திரெங்கானுவில் வீட்டை சேமிப்புக் கிடங்காக மாற்றிய இருவர் கைது: RM1.76 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

கோலாலம்பூர்:

திரெங்கானு, கம்போங் டுயோங் பெசாரில் உள்ள தங்களின் வீட்டையே போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றி, கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த இரு உடன்பிறந்த சகோதரர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 1.76 மில்லியன் மலேசிய ரிங்கிட் (RM) மதிப்புள்ள 22 கிலோகிராம் எடையுடைய ‘கஞ்சா மொட்டுக்கள்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் தெரிவித்துள்ளார்.

“கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்கி வரும் ஒரு அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சேமிப்புக் கிடங்கு காவலர்களாக (Storekeepers) செயல்பட்டு வந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உலகளாவிய சந்தையை இலக்காகக் கொண்டு கடத்தப்பட்ட இந்த உயர் ரக கஞ்சா மொட்டுக்கள், மின்-சிகரெட் எனப்படும் ‘வேப்’ (Vape) திரவங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படவிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.”

கைதானவர்களில் 50 வயதான மூத்த சகோதரர் மீது ஏற்கனவே 13 போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் சேர்த்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 149,000 மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது கைதான இருவர் மீதும் 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் தடுப்புக் காவல் (Remand) மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டத்தோ முஹமட் கைரி உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here