கோலாலம்பூர்:
கோலாலம்பூரின் புகழ்பெற்ற ஜாலான் ஆலோரில் (Jalan Alor) உள்ள 6 உணவகங்கள், எலி மற்றும் கரப்பான் பூச்சி போன்ற கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நேற்றிரவு புக்கிட் பிந்தாங்கில் உள்ள 45 உணவகங்களில் நடத்திய அதிரடிச் சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சமையலறைகளில் பூச்சிகள் நடமாட்டம், முறையற்ற உணவுச் சேமிப்பு, எண்ணெய் வடிகட்டிகளைப் பராமரிக்காமை மற்றும் சில ஊழியர்கள் கட்டாய டைபாய்டு (typhoid) தடுப்பூசி மற்றும் உணவு கையாளுதல் பயிற்சியைப் பெறாதது போன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாநகர் மன்றத்தின் பல்வேறு சட்டங்களின் கீழ் மொத்தம் 74 அபராதங்களும் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதோடு, 6 வளாகங்களுக்கு மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தலைநகர மக்களின் நல்வாழ்வையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என DBKL எச்சரித்துள்ளது.


















