கோலாலம்பூர்:
ஜனநாயக மேம்பாட்டிற்கான தியோ பெங் ஹொக் சங்கம் (TBH-ADA), தேசிய நிதிக் குற்றத்தடுப்பு மையத்தின் (NFCC) ஆலோசனை வாரிய உறுப்பினராக டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் தலைவர் கூங் ஹுய் யென் வெளியிட்ட அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தங்களை முதன்மையாகக் கொண்ட அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை, சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.ஏ.சி.சி (MACC) தலைமை ஆணையரின் இந்த நியமனம் கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்.எஃப்.சி.சி சட்டத்தின் கீழ், பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாட்சிமை தங்கிய பேரரசரால் இந்த நியமனம் ரத்து செய்யப்பட முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பங்குகளின் உரிமையாளர் விவகாரம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகள் எனப் பல விவகாரங்களில் அஸாம் பாக்கி மற்றும் எம்.ஏ.சி.சி மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைக்க வேண்டும் என்றும், நாட்டின் நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பில் அவரைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்றும் கூங் கேள்வி எழுப்பியுள்ளார்.























