ஒற்றுமையும் அரசியல் நிலைத்தன்மையுமே ஜோகூரின் வளர்ச்சிக்கு அடித்தளம் – தீராம் தொகுதியில் ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தல்

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி தொடர வேண்டுமெனில் இன ஒற்றுமையும் அரசியல் நிலைத்தன்மையும் அவசியம் என்றும், மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஜோகூர் மந்திரி பெசாரும், மாநில தேசிய முன்னணித் தலைவருமான டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

ஜோகூர் மாநில 16ஆவது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீராம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாநில நிர்வாகம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

ஜோகூர் 110 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றிருப்பதாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரியை விட உயர்வாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, கால்பந்து, வலைப்பந்து, ரக்பி உள்ளிட்ட விளையாட்டுத் துறைகளிலும் ஜோகூர் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றார்.

மாநில வருவாய் அதிகரித்ததன் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மலாய், சீனர், இந்தியர், பழங்குடியினர் என இன வேறுபாடின்றி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், “பாங்சா ஜோகூர்” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து மக்களும் ஒரே குடும்பமாகக் கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து தம்மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகக் கூறிய அவர், தேசிய முன்னணியில் அம்னோ, ம.சீ.கா., ம.இ.கா. மற்றும் கூட்டணிக் கட்சிகள் வழியாக அனைத்து இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஜோகூரின் முன்னாள் தலைவர் டத்தோ ஒன் ஜாஃபர் வலியுறுத்திய ஒற்றுமைக் கொள்கையை நினைவுகூர்ந்த அவர், மலாய், சீனர், இந்தியர், பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார். மாநிலத்தின் எதிர்காலம், பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை அரசியல் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால், இனப் பிளவுகள் மாநில வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் காலத்தில் பரப்பப்படும் தகவல்களை வாக்காளர்கள் கவனமாக ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீராம் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அப்துல் ஹலிம் சுலைமானுக்கு கட்சித் தலைவர்கள் ஆதரவளித்தாலும், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது மக்களின் ஆதரவே என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மகளிர் அணி, இளைஞர் அணி, புத்ரி அணி மற்றும் தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரங்கள் மீதமுள்ள பிரசாரக் காலத்தில் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு, வாக்காளர்களை நேரில் சந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தேர்தல் நாள்வரை பிரசாரத்தை தீவிரப்படுத்தி, தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ அப்துல் ஹலிமுக்கு ஆதரவு திரட்டுமாறும் அவர் தனது கட்சி நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here