கோலாலம்பூர்:
மலேசியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் மிதமான உள்நாட்டு தேவை தொடரும் என்று பேங்க் நெகாரா நம்புகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜூலை-செப்டம்பர் காலத்தில் முந்தைய ஆண்டைவிட 3.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று, நேற்று என்றுள்ளிக்கிழமை பேங் நெகாரா புள்ளி விவரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதனை காட்டுகின்றன.
2வது காலாண்டில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத 2.9 விழுக்காடு குறைவான வளர்ச்சி பதிவானது. அதிலிருந்து பொருளியல் வளர்ச்சி தற்போது மீண்டு பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மிஞ்சியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட முன்கூட்டிய மதிப்பீட்டையொட்டி தற்போது பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் இலக்கான நான்கு விழுக்காடு பொருளியல் வளர்ச்சியை தற்போதைய வளர்ச்சி தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டின் வலுவான செலவினம், மேம்பட்டு வரும் தொழிலாளர் சந்தை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு காரணமாக இருப்பதாக பேங் நெகராவின் ஆளுநர் ரஷீத் கஃபார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மலேசியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. வளர்ச்சியை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கு அவை ஆதரவாக உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையையும் தாண்டியுள்ளது.
2024ல் பொருளியல் நான்கு விழுக்காடு முதல் ஐந்து விழுக்காடு வரை விரிவடையும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
2022ல் மலேசிய பொருளியல் 8.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதன் பிறகு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ல் பொருளியல் மந்தம் ஏற்பட்டது. அனைத்துலக தேவை குறைந்தது இதற்கு முக்கிய காரணமாகும்.