கோலாலம்பூர்:
கோலாலம்பூர், தானாவ் கோத்தாவில் (Danau Kota) வார இறுதியில் நடைபெறும் சந்தை ஒன்றில், வெளிப்படையாக தெரியும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்குள் (Plastic Enclosures) பூனைகள் அடைக்கப்பட்டு வெயிலில் வைக்கப்பட்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘Threads’ சமூக ஊடகத் தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட அந்த வீடியோவில், பூனைகளை வளர்த்து விற்கும் நபர் ஒருவர் பூனைகளை முற்றிலும் மூடப்பட்ட கண்ணாடி போன்ற பெட்டிகளில் வைத்து விற்பனை செய்வது காட்டப்பட்டுள்ளது.
அந்தப் பெட்டிகளில் சில குளிரூட்டும் வசதிகள் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிந்தாலும், போதிய காற்றோட்டம் இல்லாததால் பூனைகள் மூச்சுவிட சிரமப்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது போல் தெரிந்ததாக அந்தப் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
பார்க்க அழகாக (Aesthetic) இருக்கிறது என்பதற்காக அது தார்மீக ரீதியாகச் சரியானது (Ethical) என்று அர்த்தமாகாது,” என்று சாடியுள்ள அவர், பணத்திற்காக இத்தகைய வியாபாரிகளை அனுமதிக்கும் சந்தை ஏற்பாட்டாளர்களையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
பூனை விற்பனையாளர் நிழலில் அமர்ந்திருக்கும் வேளையில், வாயில்லா ஜீவன்களை மட்டும் ஏன் சுட்டெரிக்கும் வெயிலில் வைத்துள்ளார் எனப் பல இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



















