( ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மலாக்கா ஜசெக தலைவரும் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினருமான கூ போய் தியோங் நேற்று மாநில ஆட்சிக் குழு கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
நாளை முதல் டிஏபி-யின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், அமானாவின் ஒருவரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என்றார்.
“இது எங்களின் கொள்கை ரீதியான முடிவு. ஜோகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளுடன் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இன்று மலாக்கா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க வழிவகுக்கும் மலாக்கா மாநில அரசியலமைப்பு (திருத்தம்) 2026 ஜனநாயகக் கொள்கைக்கு முரணானது என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றார்.
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பி.எச் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான அரசியல் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்பது தெளிவாகிவிட்டது,” என அவர் பதிலளித்தார்.




















