வைரலாகும் ஜோகூர் ஆட்சிக்குழு பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல; அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்குமாறு மாநில அரசு அறிவுரை.

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் 2026–2031ஆம் ஆண்டுக்கான ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியல் தொடர்பான படம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று ஜோகூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அந்தப் படத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களுக்கான பொறுப்புகள், புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தாலும், அந்தப் பட்டியல் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, அந்தப் பட்டியலை உண்மையானதாகக் கருதவோ, சமூக வலைத்தளங்களில் பகிரவோ, அதனை அடிப்படையாகக் கொண்டு எந்தவித முடிவுகளுக்கும் வரவோ கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனம், ஜோகூர் சுல்தானின் அரச ஒப்புதலுடன், மந்திரி பெசாரின் பரிந்துரையின் பேரில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக வெளியாகும் எந்தப் பட்டியலையும் இறுதியானதாக்க கருத முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், ஜோகூர் மாநில அரசு, ஜோகூர் அரண்மனை மற்றும் நம்பகமான ஊடகங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமையாகக் காத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here